×

மயிலாடுதுறை அருகே குட்டையில் 50 மூட்டை ரேஷன் அரிசி கொட்டப்பட்டதால் பரபரப்பு!

 

மயிலாடுதுறை அருகே 50 மூட்டை ரேஷன் அரிசி குட்டையில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் இரு குட்டைகள் உள்ளன, இந்த குட்டைகளில் நேற்று காலை மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று, குட்டையில் கொட்டப்பட்டிருந்த ரேஷன் அரிசியை ஆய்வுசெய்தனர். அப்போது, 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிரிக்கப்படாமல் கரையிலும், ஏராளமான மூட்டைகள் பிரிக்கப்பட்டு ரேஷன் அரிசி குட்டையில் கொட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, ரேஷன் அரிசியின் மாதிரிகளை சேகரித்த வட்ட வழங்கல் அதிகாரிகள், பின்ன அதனை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.