×

ஓசூர் வழியாக காரில் கடத்திய 391 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக காரில் கடத்திய 391 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று ஓசூர் - பாகலுர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, காரில் இருந்த 391 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தியது தொடர்பாக சென்னை சௌகார்பேட்யை சேர்ந்த விஜய் சிங் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெங்களுருவில் இருந்து ஓசூருக்கு குட்காவை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.