×

அரசுப்பள்ளி சமையலர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 

தருமபுரி அருகே அரசுப்பள்ளி சமையல் பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிகரல அள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி லட்சுமி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் சமையல் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். இதனால், லட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ சிகிச்சைக்காக லட்சுமி வெளியூர் புறப்பட்டு சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று மாலை சிகரல அள்ளிக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி, பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்து பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கெண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.