×

செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

 

செய்யாறு அருகே ஏரியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சிறுங்கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கூலி தொழிலாளி. இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமார் (10). வரதராஜ் பாப்பாந்தாங்கல் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பும், வருண்குமார் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.  அதே கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் சுதாகர்(7). இவர் வருண்குமார் படிக்கும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், 3 சிறுவர்களும் நேற்று மதியம் பாப்பாந்தாங்கல் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஏரியில் இறங்கி குளித்தபோது  எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் வரதராஜ், வருண்குமார் மற்றும் சுதாகர் ஆகியோர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குட்டையில் சிறுவர்களின் உடல்கள் மிதப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் இதுகுறித்து மோரணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில் மற்றும் மோரணம் போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிறுங்காட்டூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.