×

மசினகுடியில் கரடி தாக்கி வேட்டைத்தடுப்பு காவலர்கள் 3 பேர் படுகாயம்!

 

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப் பகுதியில் ரோந்து பணியின்போது கரடி தாக்கியதில் 3 வேட்டைத் தடுப்பு காவலர்கள் காயமடைந்தனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் நேற்று மாலை வேட்டைத் தடுப்பு காவலா்கள் மாரி உள்ளிட்ட 4 பேர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று,  திடீரென வேட்டைத் தடுப்பு காவலர்களை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அங்கிருந்து தப்பியோடினர். எனினும் அந்த கரடி அவர்களை துரத்திச்சென்று தாக்கியது. இதில் மாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், ஒருவர் காயமின்றி தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை விரட்டி, காயமடைந்த 3 பேரையும் மீட்டு மசினகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு படுகாயமடைந்த மாரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் மசினகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.