×

உடுமலை அருகே துணிகரம்... செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 

உடுமலை அருகே செல்போன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கந்தவேலுவின் மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் மனைவியை உடுமலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்று அதிகாலை கந்தவேலு வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 26 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

நேற்று காலை கந்தேவல் வீட்டிற்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.