கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் கௌதம் (19), அவரது உறவினர் தீபக்(19). இவர்கள் இருவரும் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இவர்கள் உறவினர் இறப்பிற்காக, மலைக்கோட்டலம் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியில் உள்ள கல்குவாரிக்கு இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கௌதம் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட தீபக், அவரை காப்பாற்ற முயற்சித்தபோது அவரும் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார்.
அப்பகுதி மக்கள் தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்பு இருவரையும் சடலமாக மீட்டனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வரஞ்சரம் காவல்நிலைய போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.