×

ஆம்பூர் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2.5 டன் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிரீன்சிட்டி பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ஏராளமான ரேஷன்அரிசி பதுக்கி வைக்கபட்டிருப்பதாக, வருவாய்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் நவநீதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, 46 மூட்டைகளில் இருந்த 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.