×

பொள்ளாச்சியில் வாகனஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற எஸ்.எஸ்.ஐ உள்பட 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற புகாரில், மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீன்கரை ரோடு, இரட்டை கண் பாலத்தின் அருகே கடந்த 11ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன், தலைமை காவலர் சரவணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கனரக வாகனங்கள், மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கி உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாக ரெத்தினம் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனை அடுத்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐ மதிசேகரன், தலைமை காவலர் சரவணன் ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, எஸ்.பி செல்வநாகரெத்தினம் உத்தரவிட்டார்.