×

கிருஷ்ணகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... சிறுமி உள்பட இருவர் பலி!

 

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களூரை சேர்ந்த சிறுமி உள்பட 2  பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அனில்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மனைவி அபர்ணா, மகள்கள் ஆகான்ஷா, அக்‌ஷரா(10), உறவினர் ரம்யா ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி அடுத்த பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அனில்குமார் கார் மீது எதிரே பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், சிறுமி அக்‌ஷரா,அவரது உறவினர் ரம்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அனில்குமார், அபர்ணா, ஆகான்ஷா ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், மற்றொரு காரில் வந்த பெங்களூரை சேர்ந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்த காந்திகுப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.