×

வாழப்பாடி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ; பயிற்சி காவலர் உள்பட இருவர் பலி!

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பயிற்சி காவலர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(27). இவர் தருமபுரியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், காவலராக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருடன் புழுதிக்குட்டை பகுதிக்கு சென்றுவிட்டு கீரப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.  கீரப்பட்டி அருகே சென்றபோது கிருஷ்ணன் இருசக்கர வாகனம் மீது எதிரே அர்ஜுனன் என்பவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. 

இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வெள்ளிக்கிழமை இரவு சிகிக்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். கிருஷ்ணன், அர்ஜுனன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்று காவலர் கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.