×

ஈரோட்டில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை!

 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நாள்தோறும் காலையில் கடையை திறந்து வியாபாரம் பார்க்கும் சுதாகர், இரவு கடையை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சுதாகர் வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுதாகர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து சுதாகர், வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.