×

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாயின் 2-வது கணவருக்கு 22 ஆண்டுகள் சிறை!

 

பழனியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் 2-வது கணவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்கிற வெங்கடேஷ் (36). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 14 வயது சிறுமி அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு, மகள் முறையிலான அந்த சிறுமிக்கு, வெங்கடாஜலம் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் போலீசார், வெங்கடாஜலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில, இந்த வழக்கில் குற்றவாளி வெங்கடாசலத்துக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.