×

தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது... ரூ.39 ஆயிரம் பணம், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தோட்டத்து வீட்டில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பணம், 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள தோட்டத்து வீடு ஒன்றில் 11 கூட்டாக அமர்ந்து பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரம் பகுதியை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புரம் பகுதியை சேர்ந்த சித்தமல்லு (35) உள்ளிட்ட11 பேர்' என தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்கள் 11 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரம் பணம், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.