×

சாணார்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது!

 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் (50) என்பவர், சிறுமியை அடிக்கடி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி, முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.