×

மின்கம்பத்தை மாற்றி அமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்... மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!

 

அருப்புக்கோட்டை அருகே மின்கம்பத்தை மாற்றி அமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள். இவர் தனது வீட்டின் பின்புறம் இடையூறாக உள்ள மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்கக்கோரி, பாளையம்பட்டி துணை மின்நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அப்போது, அங்கு உதவி செயற்பொறியாளராக பணிபுரியும்  பசுவநாதன் என்பவர் மின் கம்பத்தை மாற்றி அமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் தர விரும்பாத வீரம்மாள் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளித்தார். தொடர்ந்து, அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை நேற்று மின்வாரிய அலுவலகத்தில் வைத்து உதவி செயற்பொறியாளர் பசுவந்தானிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.