தொடரும் ஆணவக்கொலை: ‘காதல்’ பட பாணியில் வீட்டிற்கு அழைத்து இளைஞரை வெட்டி கொன்ற பெண் வீட்டார்; பதற வைக்கும் சம்பவம்!
மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை உள்பட எட்டு பேர் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்: மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை உள்பட எட்டு பேர் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி. இவர் வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் எதிர்ப்பை மீறி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு, சோலங்கி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஊர்மிளா ஜலாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்தித்த அவரது குடும்பத்தினர், வீட்டில் வந்து தங்குமாறு கூறியுள்ளனர். இதை நம்பி சோலங்கி ணைப்பி வைத்துள்ளார். ஆனால் மனைவி வீடு திரும்பவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. இதனால் குஜராத் பெண்கள் பாதுகாப்பு 181 உதவியை நாடிய சோலங்கி பெண் காவலர் உள்பட சிலருடன் கடந்த திங்கள்கிழமை மாலை ஊர்மிளா வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வந்த சோலங்கியை, ஊர்மிளாவின் தந்தை உள்பட சிலர் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சோலங்கி துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஊர்மிளா இல்லை என்று கூறப்படுகிறது. சோலங்கி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.