தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால் கணவனை கொன்ற மனைவி
சேலம் மாநகர் அம்மாபேட்டை வையாபுரி உடையார் தெருவில் வசித்து வந்த கூலித் தொழிலாளியான கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர் , அம்மாபேட்டை வையாபுரி தெருவை சேர்ந்தவர் தங்கம்(40). இவருடைய மனைவி பத்மா(36). இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தங்கம் டேப் கட்டில் செய்யும் கூலி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். பத்மாவும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார் . இந்த நிலையில் மனைவி பத்மா-க்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி அடித்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சந்தேகம் காரணமாக , தினந்தோறும் குடித்துவிட்டு வந்து , கணவர் தங்கம் , பத்மாவை அடித்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவும் மனைவி பத்மா-வை சந்தேகப்பட்டு , அடித்து தொல்லைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பத்மா இன்று அதிகாலை , தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் குளவிக் கல்லை போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்டு , ரத்தம் வெளியேறி , கணவன் தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். கணவனை கொலை செய்த மனைவி பத்மா-வை அம்மாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.