“கள்ளக்காதலியுடன் லிவ் இன் டு கெதர்” - கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
பண்ருட்டி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் தனி குடித்தனம், வீட்டிற்கு பூட்டு போட்டு கையும் களவுமாக பிடித்த முதல் மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகள் கலைச்செல்வி (40), பி.இ., பட்டதாரி பெண்ணான இவருக்கும், வ உ சி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் லோகநாதன் (45) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு காதலித்து கடந்த 2016-ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வரதட்சணையாக 43 சவரன் தங்க நகைகள், ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கம், பீரோ கட்டில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்த லோகநாதன் புதுப்பேட்டையில் தனி குடித்தனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த முதல் மனைவி கலைச்செல்வி புதுப்பேட்டையில் வீட்டிற்கு நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கூச்சலிட்டு வீட்டிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலைச்செல்வி இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பூட்டைத் திறந்து லோகநாதன் வெளியே வர வழைத்தனர். அப்போது லோகநாதன் உடன் உள்ளே இருந்த பெண்ணுக்கும் முதல் மனைவி கலைச்செல்வி க்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் லோகநாதனை போலீசார் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.