×

நடுரோட்டில் திருமண நாள் கொண்டாட்டம் -  தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கொலை

 


 நடுரோட்டில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி அலப்பறை செய்தவர்களை தட்டிக்கேட்ட புது மாப்பிள்ளை சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.   புதுச்சேரி மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

அம்மாநிலத்தில் வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்.  கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகின்றன.   இவரது வீட்டுக்கு எதிரே ஷங்கர் -ரமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். 

 அந்த தம்பதியினர் தங்கள் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.   இதில் வில்லியனூர் அம்மா நகரைச் சேர்ந்த ரமணியின் தம்பி ராஜா,  அவரது நண்பர்கள் தமிழ்,  அசாருதீன் ஆகியோரும் மது அருந்திவிட்டு ரோட்டில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடி இருக்கிறார்கள்.   இவர்களின் அலப்பறையைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் முணுமுணுத்துக் கொண்டே இருக்க,  சதீஷ் முன்வந்து அவர்களை தட்டிக் கேட்டு இருக்கிறார்.

 இதில் ஆத்திரமடைந்த ராஜா தனது அக்காவின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தி இருக்கிறார் .   அவர் நண்பர்களும் கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள்.  ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சதீஷை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டார்.

 இது குறித்து தகவலறிந்த வில்லியனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு  செய்யவும் ராஜாவும் அவரது நண்பர்களும் மற்றும் ஷங்கர் -ரமணி தம்பதியும் தலைமறைவாகி விட்டார்கள்.   அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இருக்கின்றார்கள்.