×

`கொல்லப்பட்ட மனைவி, மருமகள்; தப்பிய 8 மாத குழந்தை!’- ராணுவ வீரரின் குடும்பத்தை பதறவைத்த இரட்டைக் கொலை

காளையார் கோவில் அருகே நகைக்காக இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குடும்பத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தனது மனைவி ராஜகுமாரி, மருமகள் சினேகா, அவரது 8 மாத பேத்தியுடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஸ்டீபன் , ராஜா ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மூத்த மகன்
 

காளையார் கோவில் அருகே நகைக்காக இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குடும்பத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தனது மனைவி ராஜகுமாரி, மருமகள் சினேகா, அவரது 8 மாத பேத்தியுடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஸ்டீபன் , ராஜா ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மூத்த மகன் ஸ்டீபன் லடாக்கில் பணியாற்றி வருகிறார்.

சந்தியாகு நேற்று தினம் இரவு தோட்டத்தில் இருந்துள்ளார். வீட்டில் அவரது மனைவி, மருமகள், பேத்தி இருந்துள்ளனர். நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ராஜகுமாரி, மருமகள் சினேகாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்துத் தப்பிச் சென்றது மர்ம கும்பல். 8 மாத குழந்தையை அந்த கும்பல் ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, இரண்டு பேர் கொல்லப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தோட்டத்தில் இருந்த சந்தியாகுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓடோடி வந்த அவர், மனைவி, மருமகள் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதைத் தொடர்ந்து காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்துக்கு சிவகங்கை எஸ்பி (பொறுப்பு) வருண்குமார் வந்து விசாரணை நடத்தினார். கை ரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நகைக்காக ராணுவ வீரர்களின் குடும்பத்தில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காளையார்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.