காதலுக்கு தடையாக இருந்த தாயை கொலை செய்து கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்
காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை வீட்டின் படுக்கை அறையில் புதைத்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர்நகர் கௌகூர் பாரத்நகரில் வசிக்கும் அஞ்சுவுக்கு இரண்டு மகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் அஞ்சு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் 10 மாதங்கள் முன்பு 2025 ஆண்டு மே 12 தேதி அன்று முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் கடந்த அக்டோபர் மாதம் பெரிய மகள் காவல் நிலையத்தில் தனது தாய் அஞ்சு காணவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணத்தில் சந்தேகம்படும் நபர்களை விசாரித்தனர். ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மவுன்டியராஜ் என்பவ்ரை அஞ்சுவின் இளைய மகள் இஷிகா காதலித்து வந்ததும் , இருவரும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து ஒன்றாக இருப்பதும் இதில் அவரது தாய் அஞ்சுவுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் தாய் இறந்த பிறகு இஷிகாவும் மவுண்டியராஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் அஞ்சு ஓட்டி வந்த பைக்கை மவுண்டியராஜ் விற்பனை செய்ய பழைய வாகங்கள் வாங்கி விற்கும் மையத்திற்கு சென்றார். அங்கு ஆதார்கார்ட் உள்ளிட்ட விவரங்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அதன் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்தபோது இஷிகா தாய் அஞ்சுவின் பைக் என்று கூறினார். இதனால் இஷிகாவை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தபோது இஷிகா உண்மையை ஒப்புக்கொண்டார். தனது காதலனுடன் இருப்பதை தாய் தடுக்க நினைத்தால் கொலை செய்து சடலத்தை வெளியே கொண்டு சென்றால் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் சடலத்தை வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழ் பள்ளம் தோண்டி புதைத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அஞ்சு வீட்டிற்கு சென்றனர். திடீரென போலீசார் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் முன்னிலையில் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அஞ்சுவின் உடலை வெளியே எடுத்தனர். வீட்டில் இருந்து சடலத்தை கொண்டு வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இஷிகா மற்றும் மவுன்டியராஜைக் கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.