`மணல் எடுப்பதில் பிரச்னை; கட்சிக்குள்ளே கலகம்!’- திமுக ஊராட்சித் தலைவர் கொலையில் அதிர்ச்சி தகவல்
சென்னை அருகே தி.மு.க பஞ்சாயத்து தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம், லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் பரமகுரு (38). இவர் 14-ம் தேதி மாலை 4.45 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் வேலையை பார்வையிட்டு விட்டு பூந்தமல்லி மெயின்ரோட்டிற்கு வந்தார். அப்போது 3 பைக்கில் வந்தவர்கள் பரமகுருவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
இந்தக் கொலை வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநின்றவூர் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (33), அதே பகுதியைச் சேர்ந்த அப்புன் என்கிற ரவிக்குமார் (33), திருநின்றவூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலாநிதி (28), மேட்டு தெருவைச் சேர்ந்த ஆஜி என்கிற ஐயப்பன் (28), மேட்டு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (23), கோமதி புரத்தைச் சேர்ந்த சரவணன் (30) ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கைதான ராஜேஷிக்கும், கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பரமகுருவுக்கும் கொசவன்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் மண் அள்ளுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ராஜேஷ், ரவிக்குமார் ஆகிய இருவர் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட பரமகுரு, தி.மு.க.வில் உள்ளார். கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.கவில் உறுப்பினர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.