பள்ளி மாணவிக்கு கத்தி முனையில் பாலியல் தொல்லை - இளைஞர் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை 23 வயதான நபர் கத்தியை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் கார்த்திகுமார் (23) என்பவர், திடீரென வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கத்தி முனையில் மாணவிக்கு பாலியல் ரீதியாக கடும் தொல்லை கொடுத்து, அவரை வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உயிருக்கு பயந்து அலறியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட கார்த்திகுமார், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக மாணவியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகுமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகுமார் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்தத் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.