×

பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் கஞ்சா.. சிறைக்குள் நடந்த துணிகரம்..

 

சிறையில் உள்ள நண்பருக்கு, பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்துக்கொடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 300 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் உள்ளனர். இதில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த அஜித் என்பவரும், வழக்கு ஒன்றின் காரணமாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அஜித்தை பார்ப்பதற்காக, அவருடைய நண்பர்கள் அகிலன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் முன் அனுமதி பெற்று சென்றுள்ளனர். அவர்கள் அஜித்துக்கு கொடுப்பதற்காக இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் கொண்டு சென்றுள்ளனர். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த காவலர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகளை  பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் சிறிய பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிடுந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அகிலன் மற்றும் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர். கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், கைதிகளுக்கு கஞ்சா, செல்ஃபோன் , சிம் கார்கள் கிடைப்பதை முழுமையாக தடுக்க முடிவதில்லை என்பது வருத்தத்திற்குரியதே.