×

தலையில் கல்லை போட்டு செவிலியர் கொலை! திருப்பூரில் பரபரப்பு

 

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருப்பூர் பல்லடம் சாலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதி இருந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிலையில் தலை மற்றும் கை நசுங்கிய நிலையில் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதுக்குட்பட்டவர் என்றும்,  தனியார் மருத்துவமனை செவிலியர் உடையில் பெண் இருப்பதன் காரணமாக உயரிழந்தவர் யார் ? பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா ?என்பது குறித்து அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் கொலை செய்ய பயன்படுத்திய கல் உள்ளிட்ட தடயங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலேயே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது திருப்பூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.