இன்ஸ்டா தோழியை கடத்தி வன்கொடுமை செய்த இளைஞர்- உணவு ஆர்டர் செய்து சிக்கினான்
12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழகிய 20 வயது மாணவரால் நாக்பூரில் இரண்டு நாட்களாகக் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு, குற்றவாளியை கைது செய்தனர்.
நாக்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் சில கேமிங் தளங்கள் மூலம் ஆகாஷ் (20) என்பவருடன் பழகியுள்ளார். இருவரும் நண்பர்கள் தினத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 வயது சிறுமி, தனது தோழியுடன் ஒரு வணிக வளாகத்திற்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார். இருப்பினும், அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அவரது கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுமி எந்த தோழிகளையும் சந்திக்கவில்லை என்பதை அறிந்ததும், உடனே அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் அப்பெண்ணின் செல்போனையும், சமூக வலைதள கணக்குகளையும் ஆய்வு செய்ததில், ஆகாஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், ஆகாஷ் மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்தவர் என்பதும், BBA படித்துவருவதோடு, நாக்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் ஆகாஷின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை உடனே வீட்டுக்கு வருமாறு அழைக்க சொல்லியதன்பேரில், அவர்களும் ஆகாஷிடம் பேசியுள்ளனர். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த ஆகாஷ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தான் நன்றாக இருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறி விட்டு, தனது போனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். சிறுமி பெற்றோருக்கு பேசிய இடமும், உணவு ஆர்டர் செய்த இடமும் ஒன்றாக இருந்ததால், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் மீட்கப்பட்டு, ஆகாஷ் கைது செய்யப்பட்டார்.