மனைவி, மகளை குளத்தில் வீசி கொன்ற கணவன்! 8 வயது சிறுவனால் வெளிவந்த பகீர் உண்மை
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை குளத்தில் வீசிய கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் எட்டு வயது சிறுவன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நிறுத்தி, தனது தந்தை தனது தாயையும், சகோதரியையும் தாக்கி குளத்தில் வீசியதாகக் கூறியுள்ளான். தனது தந்தை தன்னையும் தண்ணீரில் வீசியதாகவும் அவன் கூறியுள்ளான். அந்தச் சிறுவன், குளத்திற்கு அருகிலுள்ள புதர்களைப் பிடித்துக்கொண்டு மூழ்கிவிடுவது போல் நடித்து உயிர் தப்பியுள்ளான். பின்னர் அவன் கிராமத்தை அடைந்து, அங்கு வசிப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளான். அந்தச் சிறுவனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி சிறுவன் சொன்ன குளத்திலிருந்து இரண்டு உடல்களை மீட்டனர். இறந்தவர்கள் 32 வயதான அனிதா மற்றும் அவரது சுமார் 11 வயது மகள் மஹி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேவாஸைச் சேர்ந்த ஓட்டுநர் சுனில் செளஹான் என்பவரே அனிதாவின் கணவர் ஆவார். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அனிதா செல்போனில் பல பேருடன் பேசுவதாக சௌஹான் சந்தேகித்துள்ளார்.இதுதொடர்பாக தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த தகராறின்போது சௌஹான்,
தனது மனைவியையும் குழந்தைகளையும் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அனிதாவின் சேலையின் முனையால் கழுத்தை நெரித்த செளஹான், கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் குழந்தைகளையும் ஆழமான பகுதியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சௌஹான் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்வதற்குள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.