திருமணம் செய்ய மறுத்த காதலியை தாக்கிவிட்டு இளைஞர் தற்கொலை ! பெங்களூரில் சோகம் !
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 6 வருடமாக காதலித்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அவரை தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
26 வயது இளைஞர் ஆஞ்செபல்யாவில் வசிக்கும் கிரிஷ், கல்லூரியில் படிக்கும்போது அன்னபூர்னேஸ்வரி நகரில் வசிக்கும் நித்யஸ்ரீ என்பவருடன் பழகி வந்துள்ளார். 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 4 மாதங்களுக்கு முன்னர் பிரிந்து விட்டனர்.
தற்போது ஒரு ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் கிரிஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நித்யஸ்ரீயை தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மறுத்துவிட்டார். புதன்கிழமை காலை 11.30 மணியளவில், இருவரும் அன்னபூர்னேஷ்வரி நகரில் சந்தித்தனர், அங்கு கிரிஷ் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தினார். நித்யஸ்ரீ மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர் கிரிஷ் விஷம் தற்கொலை செய்யும் முடிவோடு விஷம் குடித்தார். பின்னர் அவர் சாலையோரத்தில் மயக்கமடைந்து விழுந்தார். இதை பார்த்த வழிப்போக்கர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை காலை அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் எல்லையில் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.