×

வீடு புகுந்து சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வசித்துவரும் 12 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.   இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த இளைஞர் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை கீரனூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் கைதான மாதவன் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மாதவன் தான் என்பது நிரூபணமானது. 

அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும்,குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.