சந்தேக வெறி... நடுரோட்டில் மனையை கத்தியால் குத்தி கொன்ற கணவன்
பொள்ளாச்சி அருகே மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் நடு ரோட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா (26). இவரது கணவர் பாரதி (29) பெயின்டிங் வேலை செய்து வந்தார். தம்பதியினருக்கு ஏழு மற்றும் ஒன்பது வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.மேலும் பாரதி ஸ்வேதாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ஸ்வேதா பழனியப்பன் வீதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் .இன்று காலை வழக்கம் போல திருநீலகண்டர் வீதியில் சுவேதா பணிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு பாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பாரதி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ஸ்வேதாவின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதனை அடுத்து நடு ரோட்டில் கொலை சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள், பாரதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பொள்ளாச்சியில் நடுரோட்டில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.