நடத்தையில் சந்தேகம்- காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவர்
குத்தாலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டாட்டா ஏஸ் சரக்கு வாகன டிரைவர் ஆதித்யன்(28). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரேமா(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆதித்யனின் நடவடிக்கையில் பிரேமா சந்தேகம் அடைந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டிலிருந்த டீசலை எடுத்து பிரேமாமீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
பலத்த காயமடைந்த பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 70 சதவீத காயமடைந்த பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் பிரேமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து ஆதித்யனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.