காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்... சென்னையில் திக்திக்
சென்னை அசோக் நகரில் காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் அடுத்த புதூர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் ஜெனரேட்டர் மெக்கானிக். இவரது மனைவி வித்யாபாரதி (28). இவர்களுக்கு 8வயதில் மகன் மற்றும் 4வயதில் மகள் உள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிரவீன்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீடு திரும்பிய பிரவீன்குமாருடன் வித்யாபாரதி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கைகலப்பாக மாறி இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் ஆக்ரோஷமாக தாக்கியதில் வித்யாபாரதி மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையறிந்த பிரவீன்குமாரின் உறவினர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த வித்யாபாரதியை மீட்டு கே.கே நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வித்யாபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அசோக் நகர் போலீசார் பிரவீன்குமாரை கைது செய்தனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.