×

"என் பெண்ணை ஏன் டா காதலிக்கிற?”- காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலியின் தந்தை

 

கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனை குத்திய காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு  சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது  சஞ்சய் காதலித்த பெண்ணின் தந்தை குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் மற்றும் கனகலெட்சுமி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் சஞ்சய் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

வாக்குவாதம் முற்றவே அவர்கள் சஞ்சையை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் சில இடங்களில் சஞ்சய்க்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய்  ரத்த காயங்களுடனும் சரிய, உடன் வந்த அவரது நண்பர்கள் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் விடாமல் துரத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராதமாக கத்தி பட்டு மாரிமுத்துவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து  கத்திக்குத்தில் காயம் அடைந்த  சஞ்சய் மற்றும் மாரிமுத்து இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக சஞ்சய் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய  போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில்  காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.