×

பணம் இரட்டிப்பாகும்… லட்சக்கணக்கில் மோசடி பாஜகவில் தஞ்சம்!- எல்பின் நிதி நிறுவன அதிபரின் சதுரங்க வேட்டை

“எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் இருப்பாக கிடைக்கும்” என்று எல்பின் நிறுவனம் செய்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார் வாலிபர் ஒருவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், “வெளிநாட்டில் நான் வேலை செய்துகொண்டிருந்த போது இரண்டு கால்களில் அடிபட்டுவிட்டது. இதனால் இன்சூரன்ஸ் பணம் 50 லட்ச ரூபாய்
 

“எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் இருப்பாக கிடைக்கும்” என்று எல்பின் நிறுவனம் செய்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார் வாலிபர் ஒருவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், “வெளிநாட்டில் நான் வேலை செய்துகொண்டிருந்த போது இரண்டு கால்களில் அடிபட்டுவிட்டது. இதனால் இன்சூரன்ஸ் பணம் 50 லட்ச ரூபாய் கிடைத்தது. உடல்நிலை பாதிப்பால் ஊருக்கே வந்துவிட்டேன். அப்போது, எல்பின் நிதி நிறுவனம் நாம் கொடுக்கும் பணத்தை ஒரே ஆண்டில் இரட்டிப்பாகத் தருவதாக நண்பர்கள் கூறினர். இதனை நம்பி அந்த நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதனை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதாகக் கூறியதோடு, காசோலை கொடுத்தார்கள். அந்த காசோலையை நாங்கள் சொல்லும் நேரத்தில்தான் போடவேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்கள் விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

பணம் குறித்து கேட்டபோது சமாளித்து முன்னுக்குப் பின் முரணாகப் கூறினர். அதன்பின்னர் என்னை மிரட்டினார்கள். இந்த நிறுவனத்தை பற்றி விசாரித்த போது மக்களை ஏமாற்றும் நிறுவனம் என தெரிந்தது. அதோடு, இந்த நிறுவனத்தின் மீது நான்கு வழக்குகள் இருக்கிறது என்பதையும் அறிந்துக் கொண்டேன். இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்ததால், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டேன். அவர்கள் தர மறுத்ததால் ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தேன். இதன் பின்னர் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். கடந்த 20-ம் தேதி எல்பின் நிறுவனத்துக்குச் சென்றபோது, ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என்னை வழிமறித்து தாக்கினர்.

இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தேன். அவர்கள் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டதோடு, வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆளும் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகள் தலையிட்டால் போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியில்லாமல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வழக்குப் போட வைத்தேன். புகார் கூறியதற்காக அரசியல்வாதிகள் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில், ‘எல்பின் நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா, அவரது தம்பி ரமேஷ், வழக்கறிஞர் பொன்.முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக ஆளும்கட்சி முதல் பாஜக பிரமுகர் வரை அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

“ராஜ்குமார் சொல்வது முற்றிலும் பொய். அவர் வெறும் 30 லட்ச ரூபாய் தான் பணம் கட்டியிருக்கிறார். ஆனால் 45 லட்சம் பணம் கட்டியதாக பொய் சொல்கிறார். ரவுடி கும்பலை அழைத்துவந்து அவர் மிரட்டுகிறார்” என்கிறார் எல்.பின் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்.

இது குறித்து பாஜக மாநிலப்பொதுச்செயலாளர் கே.எல்.நரேந்திரன், ”அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா பாஜகவில் இணைந்தது உண்மை தான். மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் கட்சியும் துணை போகமாட்டாது” என்றார்.