×

“காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்”- நடுரோட்டில் இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த காதலன்

 

தஞ்சாவூர் அருகே நடுரோட்டில் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அடுத்த   மேல களக்குடி  பரந்தை  பகுதியை  சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி . இவரது மகள் 26 வயது காவியா  இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் . இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டரான  (26 வயது)  அஜித்குமார்  என்பவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.‌ இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா  கைபேசியில் பேசியபோது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அஜித்குமார் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம். என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார். 
இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக  மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாமா  எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் . அம்மாபேட்டை போலீசார் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.