பரோட்டா வாங்க சென்ற நபர் அடித்துக் கொலை : கூடுதலாக குருமா கேட்டதால் நேர்ந்த கொடுமை!
சூலூர் அருகே பரோட்டா வாங்கச் சென்ற நபர் கடையிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே இருக்கும் முத்துகவுண்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று ஆரோக்கியராஜ் தனது பிள்ளைகளுக்கு பரோட்டா வாங்குவதற்காக கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு சென்றார். அங்கு பரோட்டாவை பார்சலில் வாங்கிக் கொண்ட அவர் கூடுதலாக குருமா கேட்டிருக்கிறார். அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் முத்து அதை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கரிகாலன் ஆரோக்கியராஜை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. பரோட்டா மாஸ்டரும், கரிகாலனும் சேர்ந்து ஆரோக்கியராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜ், அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள், பரோட்டா கடை உரிமையாளரை தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.
தகவல் அறிந்து வந்த போலீசார், உறவினர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்த பரோட்டா மாஸ்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், கரிகாலன் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.