சுவாதி- சுவேதா- சத்யா :சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் அவலம் -சமூக அதிர்ச்சி
சுவாதி, சுவேதா, சத்தியா என்று சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகளின் படுகொலைகள் தொடரும் அவலம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மென்பொறியாளர் சுவாதியை அரிவாளால் ராம்குமார் படுகொலை செய்தார். ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததால், இருந்த சிசிடிவியும் இயங்காததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இதை அடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவும் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்கவும் உத்தரவிடப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.
இதன்பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அந்த இளைஞரும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தற்போது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு கைதாகி இருக்கிறார் இளைஞர். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் . இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை பள்ளி பருவம் முதல் கொண்டு காதலித்து வந்திருக்கிறார். கருத்து வேறுபாட்டினால் பின்னர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவியான பிறகு சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானதாக சதீஷ்க்கு தகவல் கிடைத்திருக்கிறது.
வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா உடன் இதுகுறித்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயிலின் முன் மாணவி சத்யாவை தள்ளிவிட்டுள்ளார் சதீஷ். வேகமாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மாணவி சத்யா. இதை அடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
தகவல் அறிந்த போலீசார் சத்யாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷை தேடி வந்தனர். இதற்கிடையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையாளி சதீஷ் நுழையும் சிசிடிவி காட்சி வெளியானது.
மகள் இறந்த துக்கத்தில் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்துள்ளார்.
சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் என்று அடுத்தடுத்து படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.