×

திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் உல்லாசம் - 70 வயது முதியவர் கைது 
 

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் உள்ளாசமாக இருந்த 70 வயது முதியவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளன்ர். 
     
பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் சுத்தகுண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் திருட்டு நடந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் வீட்டில் திருடியதாக ஒரு முதியவரை சுத்தகுண்டே பாளையா போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்த 70 வயதான ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ரமேசுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3-வதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற நிலையில், அதனையறிந்த  2 மனைவிகள், பிள்ளைகள் சேர்ந்து ரமேசை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு சென்ற ரமேஷ் அங்கு பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை, பணத்தை திருடி உள்ளார். திருடிய நகை, பணத்தை சில பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்து உள்ளார். திருட்டு வழக்குகளில் தமிழக போலீசாரால் 4 முறை கைது செய்யப்பட்ட ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

பின்னர் அவர் பெங்களூருவுக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், வழக்கம் போல் திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைதான ரமேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 
அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்கநகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.