கணவனை தோசை கல்லால் அடித்து கொன்ற மனைவி - காதலன் உளறியதால் சிக்கினார்
கள்ளக்காதலை கண்டித்ததால், தனது உல்லாச உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து கணவனை தோசை கல்லால் அடித்தே கொலை செய்த மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து உடலை காரில் எடுத்துச் சென்று ரயில்வே தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றிருக்கிறார். போலீசாரின் விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கள்ளக்காதல் ஜோடி சிக்கி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த லிங்கநாயக்கன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தர்மதுரை. இவரின் மனைவி பிரபாவதி. கோவிந்தராஜ் என்பவருக்கும் பிரபாவதிக்கும் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. இது தெரிய வந்ததும் தர்மதுரை, மனைவியை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபாவதி கள்ளக்காதலன் கோவிந்தராஜுடன் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் நாலாம் தேதி அன்று தர்மதுரையை தோசை கல்லால் அடித்து கொலை செய்திருக்கிறார்.
அதன் பின்னர் கோவிந்தராஜுடன் சேர்ந்து தர்மதுரையின் உடலை காரில் எடுத்துச் சென்று சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி -வீரபாண்டி இடையே இருக்கும் ரயில்வே தண்டாலத்தில் உடலை வீசி விட்டு சென்றிருக்கிறார்கள் .
மறுநாள் ஐந்தாம் தேதி தர்மதுரையின் உடலை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர் பிரேத பரிசோதனையில் அவர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்ததும் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வேறொரு வழக்கில் கைதாகி இருக்கிறார் கோவிந்தராஜ். அப்போது தர்மதுரையை அவரது மனைவியுடன் சேர்ந்து தோசைக்கல்லால் அடித்து கொலை செய்ததை சொல்லி இருக்கிறார். இதை அடுத்து கொலை செய்யப்பட்ட இடம் சடலம் வீசப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணையை முடித்துள்ளனர் போலீஸார். கடந்து எட்டாம் தேதி கோவிந்தராஜ்- பிரபாவதி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.