×

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது

 

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கி தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆப் போன்றவற்றை இந்த மாணவி வைத்துள்ளார். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ்(19), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை காதலிப்பதாக ஜார்ஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி தனியாக வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் முதலில் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லி விடுவேன் என்று கூறியே பலமுறை அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் ஜார்ஜ் மிரட்டி அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். 


இது குறித்து அந்த மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் ஜார்ஜ் கைது செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் ஜார்ஜ் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பலமுறை பலாத்காரம் செய்ததுடன் பணம் பறித்தும் வந்துள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக மாணவியிடம் ரூ.15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது தான் அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்க்கு வந்த ஜார்ஜ் அந்த மாணவியின் தாயார் கண் முன்னே மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாயார் கல்லூரி மாணவரை தட்டி கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் தாயாரையும் மிரட்டி விட்டு தப்பி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர் ஜார்ஜ் மீது போக்சோ சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.