ஆறு மாதம் 400 பேர் - ஆதரவற்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
ஆதரவற்ற சிறுமியை ஆறு மாதங்களாக 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பீட் மாவட்டத்தில் அந்த 16 வயது சிறுமியின் தாய் திடீரென உயிர் இழந்து விட, சிறுமிக்கு அவரின் தந்தை திருமணம் செய்து வைத்துவிடுகிறார். திருமண வயது வரவில்லை என்றாலும்கூட தனது கடமையை முடிக்க வேண்டும் என்று 16 வயதிலேயே தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கணவரும் மாமியாரும் அந்த சிறுமியிடம் மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சிறுமி கடுமையாக பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார். அழுதுகொண்டே தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல, அவரோ சிறுமியை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்காமல் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனால் மனவேதனையில் இருந்த சிறுமி பீட் மாவட்டத்தில் இருக்கும் அம்பாஜோகை பேருந்து நிலையத்திலேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். சிறுமி ஒருவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருப்பதைப் பார்த்து அங்குள்ள ஆண்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமி புகார் கொடுக்க சென்றபோது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவரும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.
இப்படியாக கடந்த ஆறு மாதங்களாக அந்த சிறுமியை 400-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள் . தற்போது குழந்தைகள் நல அமைப்பினர் அந்த சிறுமியிடம் விசாரிக்க, அவர்களிடம் சிறுமி அளித்த புகாரின் பேரில், நான் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறேன். போலீசாரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.
தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாகவும் உள்ளார் அந்த சிறுமி.
குழந்தைகள் நல அமைப்பினர் எடுத்த நடவடிக்கையினால் இதுவரைக்கும் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.