×

இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண், அவர் கணவரைவிட்டு தனியாக பிரிந்தவர். கடந்த 2016ம் ஆண்டு, அந்த பெண்ணை, கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.  அப்போது, வடுகபாளையம் வழியில் செல்லும் புத்து மாரியம்மன் கோவில் அருகே புதரில் அந்த பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பெண்ணை தாக்கி  கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கும், தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்திரவிட்டார். குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.