×

16 வயது சிறுமியுடன் காதல், கடத்தல், பாலியல் வன்கொடுமை- இளைஞர் கைது

 

ஜெயங்கொண்டம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் பிரவீன். கூலி தொழிலாளியான இவர் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியை பிரவீன் காட்டுமன்னார்குடிக்கு அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் காட்டுமன்னார்குடியில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் மீது வழக்கு பதிந்து போக் ஷோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் உறவினர்கள் யாரும் அழைத்துச் செல்ல மறுத்து விட்டதால் அந்த சிறுமி அரியலூரில் காப்பகத்தில் தங்க வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர்.