ரோபோ ஷங்கரை தொடர்ந்து கோமதி மாரிமுத்துக்கு பரிசளித்த பிரபல இசையமைப்பாளர்!
சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரிசு வழங்கியுள்ளார்.
சென்னை: சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரிசு வழங்கியுள்ளார்.
தோகாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து முதல் இடத்தை பிடித்தார். சுமார் 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் கடந்து சாதனை படைத்துள்ளார்.
கோமதியின் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலன்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்,கோமதியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்பொழுது வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ், கோமதிக்கு புதிய ஷூ மற்றும் அவருக்கு தேவையான பொருட்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.
முன்னதாக நடிகர் ரோபோ ஷங்கர்,திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் காசோலைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.