ரெய்டு ஓவர்..மீண்டும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விஜய்
ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வரிஏய்ப்பு தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அவரை காரில் அழைத்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் விஜய்யை கையோடு அழைத்து வந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் பனையூர் இல்லம் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விஜய் வீட்டில் கடந்த 23 மணிநேரம் நடைபெற்ற சோதனை நேற்றிரவு நிறைவு பெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பிற்கு விஜய் சென்ற நிலையில் அவரை வரவேற்ற படக்குழு படப்பிடிப்பைத் துவக்கியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.