‘பாக்ஸர் அங்கிள் உங்க வேலையை பாருங்க…’ அமைச்சர் ஜெயக்குமாரை பங்கமாக கலாய்த்த நடிகர் சித்தார்த்
சித்தார்த் எடப்பாடி பழனிசாமி அரசையும் அவரையும் கடுமையாக சாடி இருந்தார்.
நடிகர் சித்தார்த் பல்வேறு சமூக பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி வருவதுடன் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்திலும் களத்தில் இறங்கி பணியாற்றினார்.
அந்தவகையில் சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து சித்தார்த் எடப்பாடி பழனிசாமி அரசையும் அவரையும் கடுமையாக சாடி இருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சித்தார்த் யார் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்த், என்னை யார் என்று அவர் கேட்டுள்ளார். ஒரு பிரச்னையும் இல்லை. அவருடைய அரசு 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்று விருது வழங்கியுள்ளனர். 2017-ம் ஆண்டு அறிவித்த விருது இன்னும் கொடுக்கப்படவில்லை. நான் நேர்மையாகச் சம்பாதித்து இந்த இடத்தில் உள்ளேன்’ என்றார்.
தனது மற்றொரு பதிவிலோ, நாட்டு பிரச்னை குறித்து கவலை தெரிவிக்கும், வரி செலுத்தும் குடிமகன்களை அவமானப்படுத்திப் பேசியே தான் நீங்கள் இந்த இடத்தை எட்டியுள்ளீர்கள் பாக்ஸர் அங்கிள். நீங்க ஒண்ணும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பார்க்கவும். அது போதும். விரைவில் நலம் பெறவும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.