பழச மறக்காத லாரன்ஸ்: ‘தர்பார்’ ஷூட்டிங்கில் கரெக்டாக ஆஜர்!
காஞ்சனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
மும்பை: ‘காஞ்சனா 3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தனது சினிமா வாழ்க்கையில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது வாழ்க்கையில் விளக்கேற்றியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரால் வாய்ப்பு பெற்று வளர்ந்தவர் தான் லாரன்ஸ். அதை அவரே பலமுறை பல மேடைகளில் கூறியுள்ளார்.அதனால் தான் ரஜினியை தனது குரு, தலைவர் என்று லாரன்ஸ் கூறிவருகிறார்.
அதனால் தனது வளர்ச்சிக்குக் காரணமான சூப்பர் ஸ்டாரை என்றுமே லாரன்ஸ் மறப்பதில்லை. குறிப்பாக தனது ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியின்போதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெறுவது. அந்த வகையில் காஞ்சனா திரைப்படம் வெளியாகி 130 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதனால் ரஜினியை மும்பையில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
மும்பையில் ‘தர்பார்’ ஷூட்டிங்கில் படுபிஸியாக உள்ள ரஜினியை நடிகை வேதிகாவுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். அதற்கான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தை அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளார்.
தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் லாரன்ஸ் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.