‘நான் கஷ்டப்படும் போது அவர் தான் கூட இருந்தார்’ : நடிகை நயன்தாரா ஓபன் டாக்!
ஷங்கர், விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, சமந்தா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பில் விருது விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, சமந்தா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய சினிமாவின் பெருமை என்ற விருது கமல் ஹாசனுக்கும், சிறந்த படம், சிறந்த நடிகர் என தொடங்கி பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த நம்பிக்கையளிக்கும் நடிகர் என்ற விருது அஜித்துக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது மற்றும் மக்களுக்கு விருப்பமான நடிகை என்ற இரு விருதுகள் கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி விருதை அவரின் கணவர் போனி கபூர் வழங்கினார்.
அப்போது பேசிய நயன்தாரா, ‘ரசிகர்களின் இந்த அன்பிற்கு நன்றி. சமீபகாலமாக நாங்கள் ஜோடியாக சந்தோஷமாக இருக்கும் படங்களை பகிர்ந்து கேள்வி எழுப்புகிறீர்கள். நான் சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்தில் தெரிகிறது. நான் சந்தோஷமாக இருப்பதை விட தற்போது நிம்மதியாக உணர்கிறேன் . உங்களுக்கு அந்த நிம்மதியை பெற்றோர், உங்களது வாழ்க்கை துணையாகப் போகிறவர்கள் என்று யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எனக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. சமூகவலைதளத்தில் நெகடிவிட்டி அதிகமாக இருக்கிறது, உங்களை பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள்.அவர்களை காயப்படுத்தாதீர்கள். நான் கடவுளை நம்புவேன். நான் தனிமையிலிருந்த போது, அவர் தான் என்னுடன் இருந்தார். அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள்’ என்றார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.