நடிகை குஷ்பு வீட்டு வாசலின் முன் CAA & NRC-க்கு எதிராக போடப்பட்ட கோலம்!
கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆண் பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் அங்குள்ள வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆண் பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அரசின் அராஜகத்தை எதிர்த்து, வேண்டாம் CAA, NRC என கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு வீட்டு வாசலிலும் கோலம் போடப்பட்டுள்ளது. இதை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக முக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் கோலம் போடப்பட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.